உலக வீடற்றோர் தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
- Web feathers
- Oct 12, 2021
- 1 min read
உலக வீடற்றோர் தினத்தை முன்னிட்டு நேற்று சென்னை கோயம்பேடு பஸ் நிலைய வளாகம், சென்டிரல் ரெயில் நிலையம் உள்பட 8 இடங்களில் சாலையோரம் வசிக்கும் தனிநபர்களை மீட்டு மறுவாழ்வு அளிக்க விழிப்புணர்வு மற்றும் மீட்பு முகாம்கள் நடைபெற்றது.
அதேபோல் சாலையோரம் வசிக்கும் தனிநபர்கள் மற்றும் வீடற்றோரை மீட்டு மறுவாழ்வு அளிக்கும் வகையில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியும் நடந்தது.தீவுத்திடல் போர் நினைவு சின்னம் அருகில் தொடங்கிய சைக்கிள் பேரணியை பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் நிருபர்களிடம் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:-
‘சென்னையில் 55 காப்பகங்கள் பொதுமக்களின் நலனுக்காக இயங்கி வருகிறது. இந்த காப்பகங்களில் தற்போது 1,667 நபர்கள் தங்க வைக்கப்பட்டு முறையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் இடங்கள் அருகிலோ அல்லது வேறு ஏதேனும் பகுதிகளில் சாலையோரங்களில் வசிக்கும் தனிநபர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இதர பிற வீடற்றோர் வசிப்பதை அறிந்தால் சென்னை மாநகராட்சியின் 1913, 94451 90472, 044-25303849 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பதிவு: தினத்தந்தி (அக்டோபர் 11, 2021)
Comments